இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: நான்கு
பைய என்ற சொல்லுக்கு மெதுவாக, மெல்ல என்பது பொருள். ஆனால் இது பையப் பைய மறைந்து கொண்டு வருகிறது. பையப்பைய என்பது இரட்டைக்கிளவியாகவும் வழக்கில் இருக்கும் ஒரு சொல்லாகும். ஆனால், இது இதே பொருளில் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. பையப்பைய என்பது அன்றைக்குப் பைபய என்று வழங்கப்பட்டது.மிக்க ஒளிராது,முணுமுணு என்று எரியும் ஒரு விளக்கு விடியற்காலத்து வெள்ளியே மீனைப் போல மெல்ல மெல்ல எரிந்து கொண்டிருக்கும் அழகை கூற வந்த ஒரு புலவர், வைகுறுமீன் பைபய தோன்றும் பெரும் என்று கூறுகிறார் சங்ககாலப் பெண்டிர் சிலர் மனைவியின் பின்புறத்தில் பந்து விளையாடி மிகவும் களைத்துப் போய்விட்டார்களாம். இருப்பினும் அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை. எனவே புதுமணல் பரப்பும் முற்றத்தில் அமர்ந்து, தங்கள் கை வளையல்கள் ஒலிக்க, மிக்க மெதுவாகத் தட்டாங்கல் ஆடினார்கள். “வான் தோய் மாடத்து வரிப் பந்து அசை கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்” பெரும் புதர்கள் நிறைந்த ஒரு காட்டுக்குள் ஒரு பாணர் கூட்டம் நடந்து சென்று-கொண்டிருக்கிறது. முன்னால் என்ன இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு மிக நெருக்கமாக செடிகொடிகள் பின்னிக் கிடக்கின்றன. எனவே அவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு, பிடித்த பிடியை விடாமல் புதர்களை விலக்கிக் கொண்டு மிக மிக மெதுவாக நடந்து செல்ல வேண்டும் அல்லவா? அவர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் எனப் புலவர் கூறுகிறார்” கை பிணிவிடா அது பைபயக் கழிமின் மலை” இத்தகைய அழகு தமிழ் பழஞ்சொற்கள் இன்னும் மறைந்து தேய்ந்து போகாதிருக்க, அவற்றை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும் அல்லவா! முனைவர் ப.பாண்டியராஜா.
மக்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்து விட்ட சங்க வழக்குகள் பற்றிய ஒரு தொடர். பகுதி:
நான்கு – பையப் பைய குறுந்தொடர்
குறுந் தொடர்கள்
தொன்மை சொல்வழக்குகள்
ப.பாண்டியராஜா