இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் – பகுதி : ஆறு
நெடுவழியில் நடந்து செல்கிறோம். நல்ல பசி. எதிரே ஒரு மாமரம் தெரிகிறது. ஆசையுடன் அருகே சென்று ஏதாவது பழம்.தொங்குகிறதா என்று கழுத்தைப் பின்புறம் நன்கு வளைத்து, முகத்தை மேலே உயர்த்திப் பார்க்கிறோம். நல்லா அண்ணாந்து பார், உச்சியில ஒரு பழம் மாதிரி தெரியுது என்று அடுத்தவர் சொல்கிறார்.இதேபோல் தான் ஒரு யானை மூங்கில் காட்டுக்குள் செல்கிறது. மூங்கில்களில் சில காலங்களில் நெல் போன்ற விதைகள் கொண்ட கதிர்கள் உருவாகும். இதனை நாம் மூங்கில் நெல் என்கிறோம். யானைகளுக்கு மூங்கில் நெல் என்றால் கொள்ளை ஆசை ஆனால் இந்த மூங்கிலில் நெல் கதிர்கள் வெகு தூரத்தில் இருக்கின்றன. எனவே மிக அருகில் சென்று தனது திக்கையால் நெற்கதிர்களை பிடிக்க மிகவும் அண்ணாந்து பார்க்கிறதாம் யானை.நெல் கொள்நெடுவெதிர்க்கு அணந்தயானை முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்பத்துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் நல்கோள் சிறுதினை குறி இவ்வாறு அண்ணாந்து பார்த்து, துதிக்கையை நீட்டி வெகுநேரம் முயன்றதால் களைத்துப்போன யானை, தன் முயற்சியை கைவிட்டு களைத்துப்போன துதிக்கையைத் தன் கொம்புகளின் மீது போட்டு ஓய்வெடுக்கிறதாம்.அண்ணாந்த யானை என்பதே இங்கு அணந்தயானை எனப்படுகிறது. இன்னும் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச்சொல் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இலக்கிய வழக்கில் இருந்துள்ளது என்று அறியும் போது நம் தமிழ் என்னும் கன்னித் தமிழே என்று உறுதியுடன் கூறத் தோன்றுகிறது அல்லவா! முனைவர் பா.பாண்டியராசா
காலங்காலமாக நம்மோடு பேச்சுவழக்கில் இருக்கும் தொன்மையான சொல்வழக்குகள் பற்றிய ஒரு கட்டுரை. பகுதி – ஆறு.
குறுந்தொடர்கள்
தொன்மை சொல் வழக்குகள்
ப.பாண்டியராஜா