இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது!

இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான் நினைவுகூர்ந்தேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தி வளமுடன் இருந்த அந்த ஊர் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் இலக்கியங்கள் கூறும் பகுதியை எடுத்து விளக்கினேன். இன்று அந்த ஊரின் நிலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த அந்தப் பேராசிரியருக்கு இடைக்கழிநாட்டில் திருமணத்திற்குப் பெண் பார்த்தார்களாம். ஊர்ப் பெரியோர்கள் அந்த ஊரில் வளமாக வாழ்ந்த பெண்கள் வெளியூரில் திருமணம் செய்துகொடுத்தால் இவ்வூரில் உள்ள வளங்கள் கிடைக்காமல் வாடுவார்கள் என்று நீண்ட தொலைவில் திருமணம் செய்துகொடுப்பதில்லை என்றும் அருகில் உள்ள ஊர்களில் உறவினர்களுக்கு மணவினை முடிப்பார்கள் என்றும் கூறியதைப் பகிர்ந்துகொண்டார். இதனை நினைவூட்டும் வகையில் “இடக்க நாட்டுப் பொண்ணு வடக்க போனா வாழாது” என்று ஒரு பழமொழி நிலவுகின்றது என்றும் கூறினார். இலக்கியத்துடன் தொடர்புடைய பழமொழியைக் கேட்டு வியப்பெய்தினேன்.

செவி வழிச்செய்தியாகப் பலவாண்டுகளாக நிலவி வரும் இந்தப் பழமொழி ஓராயிரம் உண்மைகளைத் தாங்கி நிற்கின்றது. இடைக்கழி நாடு கடற்கரை ஒட்டிய இயற்கை வளம் வாய்ந்த பகுதியாகும். மா,  தென்னை, நெல், முந்திரி, பலா என்று இயற்கை வளம் நிறைந்து காணப்படும் ஊரில் நீர்வளம் மிகுதி. குளிர்ச்சியான நிழல்தரும் மரங்கள் இன்றும் அதிகம் காணப்படும். கடல்வளம் அருகில் உள்ளதால் கடல்படுபொருள்களும் இங்கு மிகுதி. இந்த இடைக்கழி நாட்டை அடுத்துதான் நல்லூர் என்ற ஊர் உள்ளது. இங்குதான் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர்பெருமகனார் வாழ்ந்துள்ளார். இவர் பாடிய நூல்தான் சங்க நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை.

புதுச்சேரியிலிருந்து கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாகச் சென்னை செல்வோர் கடப்பாக்கம் என்ற ஊரை நெருங்கும்பொழுது இடைக்கழிநாடு என்ற பெயர்ப்பலகைகளைக் காணலாம். சங்க இலக்கியச் செய்திகள் உண்மை என்பதற்கு இந்த நூலின் வருணனைகள் சான்றாக உள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *