ஆழிப்பேரலை வெளிப்படுத்திய பழமையான கோவில்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரத்திற்கு வடக்கே ஆறுகி.மீ. தூரத்தில்அமைந்துள்ளது சாளுவன்குப்பம் என்ற கிராமம். கிறித்தவ காலத்தின் தொடக்கநூற்றாண்டுகளிலேயே சாளுவன் குப்பத்திலும் அதைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பக்காலத்தில் திருவீழ்ச்சில் எனப் பெயர் கொண்டிருந்த இவ்விடம் பின்னர் விசயநகரப் பேரரசு காலத்தில், சாளுவ மன்னன் சாளுவ நரசிம்ம தேவராயன் பெயரால் சாளுவன் குப்பம் என்ற பெயர் பெற்றது. இங்கே தான் யுனெசுகோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தின் ‘புலிக்குகை’ அமைந்துள்ளது. இக்குகைக்கு அருகாமையில், 2004 இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளின் சீற்றத்தினால் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் காணப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, பழம்பெரும் முருகர் கோவில் ஒன்று 2005 ஆம் ஆண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவை மாமல்லை கடற்கரை கோவிலுக்கு 270 அடி தொலைவில் இருக்கிறது. இதன் அமைப்பு மாமல்லபுரம் கடற்கரைக்கோயில் போல்உள்ளது. தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்றுகடலுக்கு அடியில் தான் உள்ளன. ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பதுதான் சிறப்பு படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்துபோன சாதாரண கட்டிடம் அல்ல இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் உதவி தொல்லியல் ஆய்வாளர் திரு. திருமூர்த்தி,தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப் பழமையான முருகன் கோவிலாக இதைக் கருதுகிறார். இக்கோவில் முழுமையாக கட்டப்பட்ட காலம் கிபி 4ம் / 5ம் நூற்றாண்டுக்கும், கிபி 12 ம் / 13ம்நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்கின்றன ஆய்வுக்குறிப்புகள். இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்ககாலத்திய (கிமுமூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும், இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல்கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம் தான் என்கின்றனர். எனினும் இந்திய அகழ்வாய்வாளர் ஆர். நாராயணசாமி இக்கருத்துடன் உடன் படவில்லை. அந்த காலத்துக்குரிய பிரபல இலக்கியங்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படாததுதான் அவருடைய ஐயத்திற்குக் காரணமாக உள்ளது. அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்ககாலத்தை சேர்ந்தது. இந்த இடத்தை நேரில்சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளன. இந்தகட்டிடம் ஆழிப்பேரலையால் அழிந்ததையொட்டி, பல்லவர்கள் இந்தசெங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன்மீது கற்றளியை எழுப்பியுள்ளனர். அதன் பின்னர் சோழர்காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளன. பின்னர் அதுவும் ஒரு ஆழிப்பேரலையால் அழிய, தற்போது அதே பழமையான அடித்தளமே மீதம் உள்ளதுஅதை மிகச்சிறப்பாக தற்போது தோண்டி எடுத்து பாதுகாத்து வருகின்றது தொல்லியல்துறை. இந்த செங்கற்கள் சங்ககால இடங்களான பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு ஆகியனவற்றில் கிடைக்கப்பெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றன. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ‘குறவன்கூத்து’ பற்றிய மண்சிற்பங்களும் இங்குகிடைக்க பெற்றுள்ளன. பெரும்பாலான இந்துக்கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக்கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது. 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் அல்லது ஆழிப்பேரலைகளால் இந்தச் செங்கல்கோவில் அழிந்துபோயிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் கருத்து. கோவிலின் முன்புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின்வேல் ஒன்றும் உள்ளது. மேலும், சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், பச்சைக்கல்லாலான சிவலிங்கம், சோழர்களின் செப்புக்காசு போன்ற ஏகப்பட்ட சங்கக்காலத்து பொருட்கள் கிடைத்துள்ளன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு அறிவு மிகுந்த சமூகமாக வாழ்ந்திருக்கிறோம் நாம்.
சாளுவன்குப்பம்
தமிழர் பெருமை
தமிழர் வரலாறு
தொல்பொருள்
நாகரீகம்
பல்லவர்கள்
வரலாறு