கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான கோனமுட்டான் கொல்லை என்ற மாந்தோப்பில் 500 ஆண்டு பழமையான அரிய வகை நடுகற்களை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஷ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்களான பாலாஜி, மஞ்சுநாத், கார்த்திக், செல்வமணி மற்றும் திம்மராஜ் ஆகியோர் கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது: 6 ஆண்டுக்கு மேலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொல்லியல் சார்ந்த இடங்களையும், மிச்சங்களையும் என்னுடன் சேர்ந்து, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் ஆவணப்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஐ.கொத்தப்பள்ளி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, இரண்டு அரிய வகை நடுகற்களை கண்டுபிடித்துள்ளோம்.

இதில், ஒரு நடுக்கல்லில் வீரன் ஒருவன் திருசின்னம் என்ற இசைக் கருவியைத் தனது இடது கையில் பிடித்தவாறும், மற்றொரு நடுகல் பன்றியுடன் சண்டையிட்டவாறு மரணம் அடைந்தவருக்கு எடுக்கப்பட்ட கல் ஆகும். வீரத்திலும், திறமையிலும் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துக் காலங்களிலும் ஒருமித்த இயல்புடையவராய் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நடுகற்கள் சான்றுகளாக இருக்கின்றன. தமிழகத்தில் கிடைத்த பெரும்பாலான நடுகற்கள் வீரன் தான் ஈடுபட்டிருந்த போரிலோ அல்லது திறமையை நிரூபிக்கக்கூடிய செயலில் இறந்து விட்டாலோ அல்லது ஒரு மனிதன் தன் சமூகத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறப்புற்று விளங்கக் கூடியவர்களுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல் தான் தற்போது ஐ.கொத்தப்பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லானது வீரன் ஒருவன் போர் கலையிலும், இசைக் கலையிலும் சிறந்து விளங்கியுள்ளான்.

எனவே, தான் அவன் உயிரிழந்த பிறகு அவன் சிறப்பையும், புகழையும் பறைச்சாற்றும் வகையில் அவனுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுக்கல்லில் உள்ள வீரனின் தலையில் பெரிய கொண்டை, காதில் காதணியும், கழுத்தில் அணிகலன்களும், இரு கைகளில் தண்டையும், இடுப்பில் இடைவாளும், கச்சையும் உள்ளது. அத்துடன் வீரனின் வலது விலாப்பகுதியில் எய்யப்பட்டுள்ள அம்பு இடதுபுறமாக வெளிவந்துள்ளது. நடுகல்லில் உள்ள வீரன் இசைக்கலைஞராக, போர் வீரனாக இருந்திருக்கலாம். இதன் மூலம் இவ்வீரன் போரில் அம்பு எய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என்பது தெரிய வருகிறது. மேலும், இந்த நடு கல்லில் உள்ள சிறப்பு, பெரும்பாலான நடுக்கற்களில் உள்ள வீரர்களின் இடது கையில் வில்லோ அல்லது கேடயமோ இருக்கும். வலது கையில் வாள் தான் இருக்கும்.

ஆனால், இந்த நடுகல்லில் உள்ள வீரனின் வலது கையில் கத்தியும், இடது கையில் திருச்சின்னம் என்றழைக்கப்படும் இசைக்கருவியும் உள்ளது சிறப்பம்சமாகும்.
இந்த இசைக்கருவியானது குடமுழுக்கு, மங்கள ஊர்வலம், தேர்த்திருவிழா, தெய்வம் மற்றும் அரசன் ஆகியோர் முன்பு இசைக்கப்படும் கருவியாகும். அக்காலத்தில் இந்த இசைக்கருவி வாசிப்பவர்களுக்கு கொடையும், மானியமும் வழங்கப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த இசைக்கருவி தமிழர் பண்பாட்டில் முக்கிய இடமும் பெற்றுள்ளது. அதே இடத்தில் இந்த நடுக்கல்லிற்கு இடது புறத்தில் மற்றொரு பன்னிக்குத்திப்பட்டான் நடுகல் உள்ளது. இந்த நடுகல்லில் உள்ள வீரனின் சிற்பம் தெளிவாக உள்ளது. வீரனின் தலையில் கொண்டை, கழுத்தில் அணிகலன்கள், இடையில் கச்சை கட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது கையில் கத்தியும், இடது கையில் வில்லும் உள்ளது. அத்துடன் வீரனின் இடது காலின் மூட்டுப்பகுதியை பன்றி ஒன்று கடித்தவாறு உள்ளது. பன்றியின் முதுகிற்கு கீழ்பகுதியில் இரு அம்புகள் பாய்ந்துள்ளது. இதன் மூலம் வீரனுக்கும், பன்றிக்கும் இடையே நடைபெற்ற போரில் பன்றியும், நடுகல்லில் உள்ள வீரனும் இறந்துள்ளான் என்பதை காட்டுகிறது. இந்த நடுகற்கள் 500 ஆண்டுகள் பழமையான நடுக்கற்கல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். 

source ; dinakaran.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *